பரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை
தமிழகத்தை உலுக்கிய தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தை உலுக்கிய தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரியாக இருந்தவர் சுமதி ரவிச்சந்திரன். இவரும் இவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரும் தட்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார் வைக்கப்பட்டது. இதற்காக பல கோடிகளை இவர்கள் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதனால் 2009ல் இவரின் வீட்டில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். சோதனையின் போது 50 லட்சம் ரூபாய் வரை பணம், நகைகள் அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
சுமதி, அவரது கணவர் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவிய டிராவல் ஏஜென்சியை சேர்ந்த பாத்திமா, உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சுமதி மீது இன்னொரு வழக்கும் நிலுவையில் இருந்தது.
முறைகேடாக சொத்து குவித்ததாக இவர் மீது போடப்பட்ட வழக்கு நீண்ட விசாரணைக்கு பின் 2016ல் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தட்கல் லஞ்ச மோசடி வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2009ல் இருந்து இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
சுமதி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். இந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் இருந் சுமதி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமதிக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.