"குட்கா".. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 10 மணி நேர சிபிஐ விசாரணை முடிந்தது!
இன்று சிபிஐ முன்பு நேரில் ஆக உள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்
Recommended Video
சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிவி. ரமணா ஆகியோரிடம் இன்று சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தியதில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது.
டிஜிபி ராஜேந்திரன்
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையை சிபிஐ நடத்தியது.
அமைச்சர் விஜயபாஸ்கர்
பிறகு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குட்கா வழக்கில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார். அவரது உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சம்மன் அனுப்பியது
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் விஜயபாஸ்கரை இன்று மதியம் நேரில் ஆஜராகுமாறு நேற்று சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது. இதேபோல முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 5 பேரையும் நேரில் வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
நேரில் ஆஜர்
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிவி. ரமணா இன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விஜயபாஸ்கர்
அதேபோல, ஏற்கனவே ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரகசியமாக பி.வி. ரமணாவுக்கு முன்னரே விஜயபாஸ்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலையே ஆஜராகி விட்டார். இதையடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட 10 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர். இரவு 8 மணியளவில் விசாரணை முடிவுக்கு வந்தது
சூடு பிடித்துள்ளது
அதேபோல ரமணாவிடமும் இரவு 8 மணி வரை விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட 9 மணி நேரம் அவர் விசாரிக்கப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குட்கா வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.