முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்.. காணும் பொங்கலில் யாருமில்லாமல் காற்று வாங்கிய மெரினா கடற்கரை
சென்னை: முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் முடங்கியது. சென்னை மெரினா கடற்கரை யாரும் இல்லாமல் காற்று வாங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25,0000-ஐ தொட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஆக்டிவ் கேஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாநிலம் முழுவதும் தொடர்ந்து 2-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதுபோக இன்று காணும் பொங்கலாகும். வழக்கம்போல் காணும் பொங்கலில் மக்கள் ஆறுகள், கடல்கள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.
10, +2 பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. முழு விபரம்
காற்று வாங்கிய மெரினா
ஆனால் இந்த முறை அனைத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். முழு ஊரடங்கு காரணமாக தலைநகர் சென்னை முடங்கியது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மாநகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக காணும் பொங்கல் அன்று லட்சக்கணக்கானோர் திரளும் சென்னை மெரினா கடற்கரை யாரும் இல்லாமல் காற்று வாங்கியது.
மதுரை, கோவை
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை ராஜீவ் காந்தி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பயணிகள் வரத்து குறைவால் சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வழக்கமான பரபரப்பு இல்லை. சென்னை முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களிடம் இருந்து சுமார் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முழு ஊரடங்கு காரணமாக சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோவையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்கா நகரமான மதுரையில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேளாங்கண்ணி, நெல்லை, திருச்சி
விழுப்புரத்தில் 60 இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலம் இருக்கும் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமில்லை. இதேபோல் முக்கிய நகரங்களான திருச்சி, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
Recommended Video
ஊட்டி, கொடைக்கானல்
இதேபோல் சுற்றுலா தலங்களான நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுர், கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி, குற்றாலம், கல்லணை, ஒகேனக்கல் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கோவை, நாகர்கோவில், தென்காசி, நீலகிரி பகுதிகளில் கேரள எல்லை பகுதிகளிலும், கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.