அனுஷ்கா ஷர்மா பற்றி டபுள் மீனிங்கில் பேசவில்லை.. நான் என்ன சொன்னேன்னா.. சுனில் கவாஸ்கர் விளக்கம்
சென்னை: சுனில் கவாஸ்கருக்கு, நேரம் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாது.. நேரடியாக விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவும் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இத்தனைக்கும் காரணம் கவாஸ்கர் செய்த ஒரு கமெண்ட். ஐபிஎல் தொடரில் விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதுபற்றிய டிவி வர்ணனை நிகழ்ச்சியின்போது கவாஸ்கர் ஒரு கமென்ட் அடித்து வம்பில் சிக்கிக் கொண்டார்.
ஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்!
இரட்டை அர்த்தம்
லாக்டவுன் காலகட்டத்தில் அனுஷ்கா சர்மா வீசிய பந்துகளை எதிர்கொண்டு தான் கோலி பயிற்சி எடுத்தார். எனவே அவரால் களத்தில் பழைய டச்சுக்கு வரமுடியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இது இரட்டை அர்த்தத்தில் பொருள் கொள்ளப்பட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
அனுஷ்கா ஷர்மா கண்டனம்
அது ஒரு பக்கம் என்றால், அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் விரிவாக இதுபற்றி எழுதி, கவாஸ்கர் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இத்தனை காலமாக பிற கிரிக்கெட் வீரர்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்து விமர்சனம் செய்துள்ளீர்கள். அதே மாதிரியான கருத்தை எனக்கு எதிராகவும், எங்களுக்கு எதிராகவும் ஏன் நீங்கள் கூறவில்லை.
எனது பெயரை இழுக்காதீர்கள்
எனது கணவரின் ஆட்ட திறமை பற்றி உங்களிடம் கூறுவதற்கு எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும். ஆனால், அதில் எனது பெயரை இணைக்க வேண்டிய தேவை என்ன வந்தது? இது 2020ம் ஆண்டு. ஆனால் இப்போதும் என் மீதான விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை. எனது பெயரை கிரிக்கெட் உலகத்திற்கு எடுத்து வருவது எப்போது நிற்கும்? நீங்கள் ஒரு ஜாம்பவான். கிரிக்கெட் உலகில் உயரமான இடத்தில் இருப்பவர். எனவே நான் என்ன உணர்ந்தேனோ அதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பி இதை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் விளக்கம்
இது தொடர்பாக ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு சுனில் கவாஸ்கர் இன்று அளித்துள்ள பேட்டியில் தனது நிலை பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பல பேட்ஸ்மேன்களும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சரியாக ஆட முடியவில்லை. இதற்கு காரணம் ஊரடங்கு காலத்தில், அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததால் போதிய பயிற்சி பெற முடியவில்லை. இதைத்தான் நான் விராட் கோலி விஷயத்தில் சொல்ல விரும்பினேன்.
அனுஷ்கா பந்து போட்ட வீடியோ
அனுஷ்கா ஷர்மா டென்னிஸ் பந்தை விசுவதும், அதை எதிர்த்து, விராட் கோலி பேட்டிங் செய்வதும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த யாரோ, விராட் கோலி வீட்டு வளாகத்தில், மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சியை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருந்தார். அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். இவ்வாறாக வீட்டுக்குள் பயிற்சி எடுத்தாரே தவிர முறையான பயிற்சி எடுக்க முடியவில்லை. வீரர்களால் நடப்பு ஐபிஎல் போட்டியில் சரியாக ஆட முடியாததற்கு அது ஒரு காரணம் என்பதுதான் எனது கருத்து.
அவமரியாதை இல்லை
இதில் அனுஷ்கா சர்மாவை அவமரியாதை செய்து விட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. விராட் கோலி அனுஷ்கா சர்மா என்று கிடையாது. எந்த ஒரு வீரரும் பயிற்சி இல்லாமல் ஆடும் போது தடுமாறுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்ட விளக்கம் தான் அது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோரில் நானும் ஒருவன்.
வீரர்களுடன் மனைவி
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அலுவலகம் போய்விட்டு இரவு வீடு திரும்புகிறார்கள். மனைவியை சந்திக்கிறார்கள். இதனால் அவர்கள் பணித்திறன் பாதிக்கப்படாதபோது, கிரிக்கெட் வீரர்கள் மட்டும், ஏன் மனைவியுடன் வெளியே செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன். அப்படி இருக்கும்போது அனுஷ்கா ஷர்மா காரணமாக, விராட் கோலி ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டுவிட்டது என்று நான் சொல்லுவேனா? நான் சொன்ன விஷயத்தை முழுமையாக மடைமாற்றி என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.