நீயா நானா... சுனில் vs பிரசாந்த் கிஷோர்... இரு நபர் போட்டியால் பரபரக்கும் திமுக-அதிமுக
சென்னை: தமிழக அரசியலில் திமுக-அதிமுக இடையேயான அதிகாரப் போட்டி இப்போது இரு நபர் யுத்தமாக மாறியுள்ளது.
அது யார் அந்த இரு நபர் எனக் கேட்கிறீர்களா, திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஒரு காலத்தில் திமுகவுக்கு பணியாற்றி தற்போது அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கக் தொடங்கியிருக்கும் சுனில் ஆகிய இருவரும் தான்.
இனி போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இல்லை சுனிலுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் தான் இரு கட்சிகளின் முன்னணியினரே தெரிவிக்கிறார்கள்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் பிரச்சனை சரியாகும்.. சிங்கப்பூருக்கே என்ன நிலைன்னு பாருங்க!
சுனில் ராஜினாமா
திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை ஆற்றி வந்த சுனில் என்பவர் அன்மையில் திமுக முகாமில் இருந்து வெளியேறி அதிமுக முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவர் திமுகவை விட்டு வெளியேற மிக முக்கியக் காரணம் பிரசாந்த் கிஷோர் தான். அவரின் வரவு இவரை வழியனுப்பி வைத்தது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு நமக்கு நாமே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஊராட்சி சபைக் கூட்டம் என பல வியூகங்களை வகுத்தவர் சுனில்.
பிரஸ்டீஜ் பிராப்ளம்
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் ஒப்பந்தம் செய்ய பிரசாந்த் கிஷோர் தரப்பு முயற்சித்த போதே அவர்கள் தேவையில்லை எனக் கூறினார் சுனில். இல்லை அவர்களும் வரட்டும் நீங்களும் இருங்க இணைந்து செயல்படுவோம் என ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிராசாந்த் கிஷோருக்கு கீழ் பணியாற்றுவதை பிரஸ்டீஜ் பிராப்ளமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி ஹைதராபாத் சென்றுவிட்டார் சுனில்.
தேர்தல் வியூகம்
இதனிடையே திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் சென்னையில் அலுவலகம் அமைத்து பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சுனில். இவர் எப்படி அதிமுகவுக்குள் சென்றார், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுனிலை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது தனிக்கதை. தற்போதைய சூழலில், பிரசாந்த் கிஷோரிடம் சுய விளம்பரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை தாம் தோலுரித்துக் காட்டுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு அதிமுகவுக்கு வியூகங்கள் வகுக்கும் பணிகளை கவனிக்கிறார் சுனில்.
இரு நபர் போட்டி
இதனால் திமுக-அதிமுக என இரு பெரும் கட்சிகளுக்கு இடையே நடந்த மல்யுத்தம் இப்போது இரு நபர் சண்டையாக மாறி, யார் யாரை வெல்வது என்பதில் வந்து நிற்கிறது. இதனை இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலர் ரசிக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனைக்கு நாம் தான் கிடைத்தோமா என இரு கட்சிகளிலும் அதிருப்தி குரல்கள் எதிரொலிக்கின்றன.