மூச்சுகூட விட முடியல.. வாயோடு வாய் வைத்து.. பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய பிரியங்கா..!
பிறந்த குழந்தையை காப்பாற்றிய பெண் டாக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
சென்னை: கொரோனா நோயாளிக்கு பிறந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது.. இதையடுத்து, பதறி போன டாக்டர் பிரியங்கா, எதைபற்றியும் கவலைப்படாமல், டக்கென அந்த குழந்தையின் வாயில் வாய் வைத்து ஊதி மூச்சுவிட உதவிய சம்பவம் பலரையும் பேச வைத்து வருகிறது.
தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது.. பலரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. பலர் குணமடைந்தும் டிஸ்சார்ஜ் ஆகி வருகிறார்கள்.. ஒருவேளை தொற்று பாதிக்கப்பட்டு, அவர்கள் குணமடைந்தாலும், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
அப்படிப்பட்டவர்தான் பிரியங்கா.. பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.. 31 வயதாகிறது.. 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்... கடந்த அக்டோபர் மாதம் பிரியங்காவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 20 நாட்கள் தீவிர சிகிச்சை தரப்பட்டது.. பிறகு மீண்டு வந்தார்..!
டியூட்டி
இப்போது டியூட்டியில் சேர்ந்துவிட்டார்.. ஏற்கனவே தொற்று தாக்கியதால், தற்போது மிகுந்த கவனத்துடன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று ராத்திரி 2.30 மணி இருக்கும்.. அப்போது, ஒரு பெண் பிரசவ வலியில் துடிக்கிறார் என்ற தகவல் அறிந்து அங்கு ஓடினார்.. அந்த கர்ப்பிணி பெண் ஒரு கொரோனா நோயாளி.. சர்க்கரை நோயாளியும்கூட.. அதனால், இந்த பிரசவம் மிகவும் சவாலாக இருந்தது.. இந்த பிரசவம் பார்ப்பவர்களுக்கும் ஆபத்துதான்.
டாக்டர்கள்
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாஸ்க், கிளவுஸ், கவச உடை போன்றவற்றை அணிந்து கொண்டு மற்ற டாக்டர்களுடன் பிரியங்கா பிரசவம் பார்க்க முன்வந்தார்.. அந்த பெண்ணுக்கு இது 3வது குழந்தை.. 4 கிலோ எடையுடன் இருந்தது... கர்ப்பிணி தாய் ஏற்கனவே கொரோனா பாதித்தவர் என்பதால் குழந்தைக்கும் ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என்று நினைத்து, குழந்தையை தனி வார்டில் வைத்து கண்காணிக்க முடிவு செய்தனர். அதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது..
திணறல்
குழந்தையை தனி வார்டுக்கும் கொண்டு சென்றார்கள். அப்போது ஆம்புலன்சில் இருந்தபோது குழந்தை திடீரென மூச்சுவிட திணறியது... அதைப்பார்த்து பதறிபோன டாக்டர் பிரியங்கா, டக்கென மாஸ்கை கழற்றிவிட்டு அந்த குழந்தையின் வாயில் வாய் வைத்து ஊதினார்.. அந்த மூச்சுக்காத்து, குழந்தையின் உடம்பில் சென்றது.. பிறகு, குழந்தையின் இதயத்துடிப்பை சீர்படுத்த இதய பகுதியை அமுக்கி அமுக்கி உதவினார் பிரியங்கா..
நிம்மதி
இப்போது குழந்தை பிழைத்து கொண்டது.. இப்போது குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும், பாதிப்பும் இல்லை.. இதை பார்த்து அங்கிருந்தோர் அனைவருமே நிம்மதி அடைந்தனர். ஏற்கனவே கொரோனா தாக்கியவர்கள் மறுபடியும் கொரோனா நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தால் எளிதில் தொற்றிக் கொள்ளும் என்பது தெரிந்தும், பிரியங்காவின் இந்த துணிச்சலான முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.