வானில் தோன்றும் சூப்பர் பிங்க் மூன்... பூமியை நெருங்கி வரும் நிலா
சென்னை: வானில் நிகழும் அற்புத மாற்றங்களில் ஒன்றான சூப்பர் பிங்க் மூன் தென்படுவதை உலகெங்கும் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் வீடுகளிலேயே முடங்கிகிடக்கும் மக்களுக்கு இந்த சூப்பர் பிங்க் மூன் சற்று உற்சாகத்தை கொடுத்துள்ளது. பூமிக்கு அருகே நிலா நெருங்கி வரும் போது அது வழக்கத்தை விட சற்று பெரிதாக காட்சியளிக்கும். பூமியில் இருந்து ஏறத்தாழ 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலா பவுர்ணமி தினமான இன்று பூமியை நெருங்கி வருகிறது. வழக்கமான பவுர்ணமி நாட்களை விட இன்று தோன்றும் நிலா 7 % வரை பெரிதாக காட்சிதரும். இந்த நிகழ்வை தான் சூப்பர் பிங்க் மூன் என்றழைக்கிறார்கள்.
உலகம் முழுவதும் இந்த சூப்பர் பிங்க் மூனை காணும் நேரம் நாடுகளுக்கு நாடு மாறுபடும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கியூபா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் இன்றிரவே சூப்பர் பிங்க் மூனை முழுமையாக காணமுடியும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாளை காலை 8 மணிக்கு தான் சூப்பர் பிங்க் மூன் தென்படும் என்பதால் அப்போது நம்மால் காண முடியாது.
அமெரிக்காவில் வசந்த காலத்தில் இளஞ்சிவப்பு மலர்கள் பூப்பதால் நிலவுக்கு சூப்பர் பிங்க் மூன் என பெயர்காரணம் தோன்றியதாகவும், ஆனால் உண்மையிலேயே நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அடுத்த சூப்பர் பிங்க் மூன் இந்தாண்டின் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் தோன்றக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டின் முழு முதற் பிரகாசமான பிரமாண்ட நிலவை இந்தியா காண முடியாதது வானவியல் ஆர்வலர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.