ரூ 1000 கோடி வருவாயை மறைத்தது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்.. வருமான வரித் துறை ரெய்டில் அம்பலம்
சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், செல்வரத்தினம் கடைகளில் ரூ 1000 கோடி வருவாயை மறைத்தது வருமான வரித் துறை சோதனையில் அம்பலமானது.
சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 37- க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 1ஆம் தேதி முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
போரூர், புரசைவாக்கம் கடைகளில் 4 நாட்களாக நடந்த ரெய்டு முடிவடைந்த நிலையில் நேற்று முன் தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை 5ஆவது நாளாக திநகரில் உள்ள கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
புரசைவாக்கம், போரூர் கடைகளில் ஓவர்.. திநகர் சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு
சோதனை
இங்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை மற்றும் நெல்லையில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் ஆகிய இரு நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தினோம்.
வருமான வரித் துறை
இதில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிறுவனம் ரூ 1000 கோடி வருவாயை பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கில் காட்டாமல் இருந்தது சோதனையில் அம்பலமானது. அது போல் ஜவுளி, நகைகளை கணக்கில் வராத 150 கோடி ரூபாய் மூலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
ரூ 80 கோடி
அது போல் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 80 கோடி மதிப்பிலான போலி ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கணக்கில் வராத பணத்தின் மூலம் தங்கம் வாங்கியதற்கான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத வாடகை ரசீதுகள், ஸ்க்ராப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ 7 கோடி கிடைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ 10 கோடி
மேலும் சோதனை நடத்தப்பட்ட 37 இடங்களில் இருந்து ரூ 10 கோடி ரொக்க பணமும் ரூ 6 கோடி தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.