"சோலி".. இது லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை கண்ணன் தப்பான அர்த்தத்தில் பேசலை.. ஆதரவாளர்கள்
நெல்லை கண்ணன் வட்டாரமொழி புரிந்து கொள்ளப்படவில்லை என்கிறார்கள்
Recommended Video
சென்னை: "பிரதமர் மோடி, அமித்ஷாவின் சோலியை முடிக்க மாட்டீங்கிறீங்களே.. சாய்புமாரு முடிப்பாங்கனு பாத்தா, மாட்டேங்காகளே" என்றெல்லாம் நெல்லை கண்ணன் பேசியது வட்டார வழக்கம்.. லோக்கல் லேங்குவேஜ்.. இதை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை" என்று ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன்.. இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும், ஒருமையிலும் பேசினார்.
ஆபரேஷன் சக்ஸஸ் என எச். ராஜா டிவிட் செய்தது எப்படி? அடியாட்கள் வந்தது ஏன்? சந்தேகம் எழுப்பும் சுப.வீ
நெல்லை கண்ணன்
மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. தமிழக பாஜகவினர் கொதித்து போய்விட்டனர். காரணம், "பிரதமர் மோடி, அமித்ஷாவின் சோலியை முடிக்க மாட்டீங்கிறீங்களே.." என்ற இந்த வார்த்தைகள்தான் பாஜகவினரின் ஆத்திரத்துக்கு காரணம். இதைதான் பலரும் சுட்டிக்காட்டி தங்கள் ஆதங்கத்தை சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
ஆனால், இப்படி நெல்லை கண்ணன் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், வட்டார மொழியை யாரும் சரியாக புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டுள்ளனர் என்றும் அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பேச்சு வழக்கு
பொதுவாக நெல்லை கண்ணன் பேசுவது திருநெல்வேலி பாஷைதான்.. அதன்படி ஒருவர் தன் காரியத்தை சரியாக செய்யாவிட்டால், அல்லது திறமையாகவும், துரிதமாகவும் வேலையை முடிக்கவில்லை என்றால், சோலிய முடிக்க மாட்டேங்காகளே" என்று அசால்ட்டாக சொல்வது வழக்கம்.. இது ஒரு லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை மட்டுமல்ல.. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மக்கள் இப்படி சர்வ சாதாரணமாக பேசுவார்கள்.
சாய்புமாரு..
இது ஒரு சாதாரண வழக்க பேச்சு.. இதற்கு அர்த்தம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்பதல்ல.. ஜோலியை முடிக்க மாட்டேங்காகளே என்றால், பார்க்கிற வேலைய முடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்றுதான் பொருள்.. "சாய்புமாரு முடிப்பாங்கனு பாத்தா, மாட்டேங்காகளே" என்றால், இவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டு, அவர்களை பதவியைவிட்டு ஓட செய்யுங்கள் என்று பொருள்.
ஆதரவாளர்கள்
இப்படி வட்டார மொழியை புரிந்து கொள்ளாமல், தவறாக புரிந்துகொண்டு.. வன்முறையை தொடுத்துள்ளனர்.. வேண்டுமானால் நெல்லை கண்ணனை கண்டித்தோ அல்லது எச்சரித்தோ விட்டிருக்கலாமே தவிர, இந்த அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது என்று ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஒருமை
ஒருபுறம் ஆதரவாளர்கள் சொல்லும் இந்த லோக்கல் லேங்குவேஜ் என்ற வாதத்தை ஏற்று கொண்டாலும், மற்றொரு புறம் பிரதமரை, அமைச்சர்களை ஒருமையில் பேசுவது தவறுதான்.. பிடிக்கிறதோ, இல்லையோ.. மோடிதான் நம் நாட்டின் தலைவர்.. நிர்மலா சீதாராமன்தான் இந்தியாவின் நிதியமைச்சர்.. இவர்களின் பதவிகளுக்குகூட மரியாதை இல்லாமல் பேசியது தவறு என்பது மற்றவர்களின் வாதமாக உள்ளது.
தவறுதான்
அதிலும் ஒரு மூத்த தலைவரே இப்படி மரியாதை இல்லாமல் பேசினால் வருங்காலமும், இளைய சமுதாயமும் என்ன நினைப்பார்கள் என்ற கவலையையும் இது ஏற்படுத்தி உள்ளது. எத்தனையோ திறமைகள், அனுபவங்கள், பக்குவங்கள் நிறைந்தவர்தான் நெல்லை கண்ணன்.. இதில் மாற்று கருத்து 200 சதவீதம் இருக்க முடியாது.. ஆனால் தனிமனித நாகரீகமும், சபை நாகரீகமும்.. யாராக இருந்தாலும் அது அவசியமே!