தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு முதல் முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 2021ஆம் ஆண்டுக்கான காலெண்டரை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி அல்லது 15ஆம் தேதிகளில் வரும். தைப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி, பிஹூ என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
உச்சநீதிமன்றத்துக்கு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கும் உச்சநீதிமன்றம் இயங்கும். இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினசரி 10ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பார்களா?
உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்படும்.
பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை. குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கு விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இந்த ஆண்டு தான் நடமுறைக்கு வரவுள்ளது.