சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
சென்னை: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மற்றும் முலாயம் சிங் யாதவுக்கு எதிரான வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிபிஐ தனது முழு தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் அவரது மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் முலாயம் சிங்கின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ், ஆகியோர் மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2005ஆம் ஆண்டு விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐக்கு நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
2007 ஆம் ஆண்டு வழக்கு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வழக்கின் விவரம் என்ன ஆனது? இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முழு தகவலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
2007 மார்ச் 1ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை வழக்கின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். ஊழல் சொத்தின் மதிப்பு ரூ.2.63 கோடி என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.