எஸ்.சி/எஸ்.டி சட்ட திருத்தம் செல்லும்.. மிக முக்கியமான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2018 மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அதிக கிரேட் கொண்ட அதிகாரிகள் கொடுக்கும் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய முடியும் என்று கூறியது.
மேலும் இதில் அரசு ஊழியர்கள் எளிதாக ஜாமீன், முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது. அரசு ஊழியர் அல்லாத பொதுமக்களை கைது செய்யவும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கும் எளிதாக ஜாமீன் கிடைக்கும், முன் ஜாமீனும் கிடைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தலித் மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தின் பேரில் இந்த சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த மாறுதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் குறிக்கோளை கேள்விக்குறியாக்குவதாக கூறி தலித் மக்கள் போராட இந்தியா முழுக்க பந்த் செய்தனர். நாடு முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் முன் ஜாமீன் வழங்க கூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தலித் மக்களால் வரவேற்கப்பட்டது. போராட்டங்களும் முடிவிற்கு வந்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசு செயல்பட்டுள்ளது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வருடம் முழுக்க விசாரணை நடந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அருண் மிஸ்ரா, வினித் சரண், மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று கூறியுள்ளது. அதோடு,
இந்த வழக்கில் கைது செய்ய முன் விசாரணை தேவையில்லை.
பணியாளர்களை கைது செய்ய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
முன் ஜாமீன் வழங்க கூடாது.
முக்கியமான வழக்குகளில் மட்டும் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான எப்ஐஆரை நீதிமன்றம் நினைத்தால் நீக்க முடியும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் தனியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர பாட், இதே தீர்ப்பை கூறினார். ஆனால் அவர் கூடுதலாக, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமீனுக்கு பதிலாக கேவியட் மனுதாக்கல் செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் மற்ற இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை கூறவில்லை என்பதால், இந்த கேவியட் வாய்ப்பு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.