கந்த சஷ்டி கவசம் அவதூறு...மேலும் ஒருவர் புதுச்சேரி போலீசில் சரண்!!
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்குப் பதிவு செய்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
Recommended Video
கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, இந்த வீடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. ''இந்துமத கடவுள்களை ஆபாசமாக யூ-டியூப்பில் கறுப்பர் கூட்டம் சேனல் சித்தரிக்கிறது. ஆகையால் இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்து அமைப்புகளால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் நாகப்பட்டினம் எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து 5பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசனை (49) மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியம்.. எப்படி அதை பயன்படுத்துவது?
இதையடுத்து இன்று சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், ''கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அந்த சேனலை தடை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.