உயிர்களை பறிக்கும் நீட் மனுநீதி தேர்வுகள்.. நவீன காலத்து துரோணர்கள்.. சூர்யா கடும் தாக்கு
சென்னை: நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் ஆக முடியாமல் போகிவிடுமோ என்ற பயத்திலும் மனஅழுத்தத்திலும் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் வலிமையாக குரல் எழும்ப தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவாகட்டும், எதிர்க்கட்சியான திமுகவாகட்டும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கும் அளிக்கவில்லை.
'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.. சூர்யா கொதிப்பு
மாநில மாணவர்களுக்கு சிரமம்
இதனிடையே மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை உருவாக்கி வருகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை எழுதுவதில் சிரமம் நிலவுகிறது. இது கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
அநீதியான தேர்வு முறை
இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 3 மாணவ மாணவியர் நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும் ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அற்புதமான வாழ்வு
மேலும் சூர்யா தனது பதவில் நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் இந்த நியாமற்ற தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்த துணைநிற்பது போலவே மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அன்பு நிறைந்த குடும்பம் உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறாம் வகுப்பு தேர்வு
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே கணிக்கையாக கேட்டார்கள் என்றும் நவீன கால துரோணகர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நீருபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றும் இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றும் நீட் தேர்வை கொண்டு வந்தவர்களை சூர்யா சாடியுள்ளார்.
நீட்டுக்கு எதிராக திரள்வோம்
ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொள்று இருக்கிறது. இன்று நடந்தே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்று சூர்யா எச்சரித்துள்ளார். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது என்றும் சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.