சூரிய கிரகணம் 2020 : நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காதீங்க
சென்னை: கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை மறுநாள் ஞாயிறு கிழமை காலையில் நிகழ உள்ளது. தமிழகத்தில் ஒரு பகுதி கிரகணமாக தெரியும், இதனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடைகிறது. ஆறுமணி நேரம் வானத்தில் அதிசயம் நிகழப்போகிறது.
பூமியை சுற்றும் சந்திரன், சூரியனை சுற்றும் பூமி என நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் போது ஆண்டிற்கு சில நாட்கள் ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. அப்போது சூரியனை நிலவு மறைக்கிறது. அப்போது சந்திரனின் நிலவு பூமியின் மீது விழுகிறது. இதுவே கிரகணமாகும்.
சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம். சூரியன் முழுவதுமாக கருமையாக காட்சி தரும். அப்போது இருண்டு விடும். சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி நெருப்பு வளையமாக நமக்கு காட்சி அளித்தால் அது நெருப்பு வளைய சூரிய கிரகணம். இது கங்கண சூரிய கிரகணம் என்றும் இதைத்தான் ring of fire என்றும் கூறுகின்றனர்.
நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே பாதுகாப்பாக கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்
எங்கெங்கு கிரகணம் தென்படும்
இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாது மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் தற்றும் சீனா, ஆப்பிரிக்காவிலும் தெரியும். இந்த பகுதி நேர கங்கண சூரிய கிரகணம் நாட்டின் தலைநகரான டெல்லியில் 94 சதவிகிதம் தெரியும்.
சென்னையில் 34% கிரகணம்
கவுஹாத்தியில் 80 சதவிகிதமும் பாட்னாவில் 78 சதவிகிதமும் தெரியும். சில்சாரில் 75 சதவிகிதமும் கொல்கத்தாவில் 66 சதவிகிதமும் மும்பையில் 62 சதவிகிதமும் பெங்கரூவில் 32 சதவிகிதமும் தென்படும். போர்ட் பிளேயரில் 28 சதவிகிதமும் தெரியும்
சென்னையில் இந்த சூரிய கிரகணம் 34 சதவிகிமும், போர்ட் பிளேயரில் 28 சதவிகிதமும் தெரியும்.
தமிழ்நாட்டில் எங்கே எப்போது
தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் கோவையில் 10:12 மணிக்கும் இந்த கிரகணத்தை பார்க்கலாம். மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வெறும் கண்ணால் பார்க்காதீங்க
சூரிய கிரகணம் பற்றி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் கூறும் போது, இந்த ஒரு அரிய வானவியல் நிகழ்வு இதற்கு முன்னாள் 2010 ஜனவரி மாதம் 15 ஆம் தேதியும் 2019 டிசம்பர் மாதம் 26ஆம் நாள் நிகழ்ந்தது. ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழும் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் காலை 10:17 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மேலும் மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும் என்றார்.
கிரகணம் தென்படும் மாநிலங்கள்
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கலாம். நம் நாட்டின் வட மாநிலங்களான ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.
2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 14ஆம் தேதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம்.
2031 மே 21ல் சூரியகிரகணம்
இதே போன்று 2031 மே மாதம் 21ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை,தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியும். என்று பிர்லா கோளரங்க இயக்குநர் தெரிவித்துள்ளார்.