எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?.. சூர்யா
Recommended Video
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் இதை எதிர்க்காவிட்டால் அதை திணிப்பார்கள் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது புதிய கல்விக்கொள்கை, அரசுப் பள்ளிகளின் அவலங்கள், நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
அவரது பேச்சிலிருந்து சில துளிகள்...
புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. இது ஏற்கப்பட முடியாதது.
பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் பரிந்துரை தவறானது. பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர். இது ஆச்சரியமாக உள்ளது.
ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். யாரும் படிக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. பல மாணவர்கள் சிரமப்பட்டு படிக்க வரும் நிலையே உள்ளது. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களால் எத்தனை நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்க முடியும். எங்கு போய் படிப்பார்கள்.
நாடு முழுவதும் சமமான கல்வி முறை இப்போது இல்லை. சமமான கல்வியைக் கொடுக்காமல் நம்மால் எப்படி கல்வித்தரத்தை உயர்த்த முடியும். நாம் இப்போது நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கலை அறிவியல் கல்லூரிகளுக்குக் கூட நுழைவுத்தேர்வு என்று புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் எப்படி மாணவர்களால் படிக்க முடியும்.
நுழைவுத் தேர்வை வைத்து தனியார் பயிற்சி நிறுவனங்கள்தான் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர். கிட்டத்தட்ட ரூ. 45,000 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் புதிய கல்விக்கொள்கையானது மாணவர்களுக்கு பயன் தருவதாக இல்லை என்றார் சூர்யா.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு, அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.