"சிங்கம்" போல சீறிய அண்ணன்.. "சிறுத்தை" போல பாயும் தம்பி.. மற்ற ஸ்டார்களும் மவுனம் கலைப்பார்களா?
சென்னை: தமிழகத்திற்கு குரல் கொடுப்பதில் சகோதரர்களும், நடிகர்களுமான சூர்யா, கார்த்தி இருவரும் என்றுமே தயங்குவதில்லை, சளைத்ததும் இல்லை. சினிமா பிரபலங்களும் பேசத் தயங்கும்போது, இவர்கள் இருவரும் தைரியமாக குரல் கொடுப்பதை தமிழக மக்கள் கை தட்டி வரவேற்று வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையாக இருக்கட்டும், தற்போது மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவாக இருக்கட்டும். இவை அனைத்துக்கும் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் பெரிய நட்சத்திரங்கள் கூட குரல் கொடுக்க தயங்கினர். ஒதுங்கியே இருந்தனர்.
டாக்டர் ஆகணும்.. 10 வருடம் முன் கேட்ட சிறுவன்.. சூர்யா செய்த உதவி.. மருத்துவரான கூலி தொழிலாளி மகன்!
எதிர்கால தலைமுறை கேள்விக்குறியாகும்
கார்த்தியின் அறிக்கையில், "'முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல' என்கிற குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020' வரைவு நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
இது நிச்சயம் வளர்ச்சி இல்லை
மலைகளும், ஆறுகளும், பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது'' என்று கேட்டு கொண்டு இருந்தார்.
காக்க...காக்க...சுற்றுச்சூழல்
இதை மேற்கோள்காட்டி இன்று சூர்யா தனது பதிவில், ''பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க...காக்க...சுற்றுச்சூழல் காக்க..நம் மௌனம் கலைப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை
இதற்கு முன்னதாகவும் மத்திய அரசு கொண்டு வந்து இருந்த தேசியக் கல்விக் கொள்கைக்கும் சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி குழந்தைகளுக்கு மூன்று மொழிகளை திணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில்தான் இன்று தேசியக் கல்விக் கொள்கைக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இன்றும் எந்த கோலிவுட் நட்சத்திரங்களும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதையே வழிமொழிவது போல் சூர்யாவும் எதிர்த்துள்ளார்.
காவல் துறையின் மாண்பை குறைக்கும்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் ‘லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயலாக உள்ளது. குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என்று சூர்யா பதிவிட்டு இருந்தார். இவர் சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்து பராட்டுக்கள் பெற்று இருந்தார்.
விவசாயத்துக்கு ஆதரவு
கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக கார்த்தி நடித்து இருந்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் உதவிகள் செய்து இருந்தார். தானும் விவசாயம் செய்யப் போவதாக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தனது குரலை உயர்த்தி இருக்கிறார்.
கேள்வி கேட்க்கும் சூர்யா
இதற்கு முன்னதாக கந்த சஷ்டியை இழுவுபடுத்தி இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்ற மத்திய அரசின் எந்த அறிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏன் அப்போது மட்டும் மவுனம் என்று ரஜினியைப் பார்த்து கேள்வி எழுப்புவதைப் போல், ''பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க...காக்க...சுற்றுச்சூழல் காக்க..நம் மௌனம் கலைப்போம்'' என்று பதிவிட்டுள்ளார் சூர்யா.