"சாதிய தூக்கி போடு".. தீரா பெருங்கனவின் தொடக்கம்.. "மாறா"க்களின் பிறப்பு.. அங்கு தொடங்குகிறது!
நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது
சென்னை: கனவுகளுக்கு எப்போதுமே உயிர்ப்பு மறைமுகமாகத்தான் இருக்கும்.. கனவாகவே இருந்து வரும்.. ஆனால் தீராப் பெருங்கனவு ஒரு நாள் உயிர்த்தெழும்போது.. மாறாக்கள் பிறக்கிறார்கள்.. அனைவரையும் புன்னகைக்க வைக்கிறார்கள்.. இதுதான் சூரரைப் போற்று படத்தின் அடிநாதமாகவும் இருக்கிறது.
விரல் விட்டு எண்ணக் கூடிய சில நல்ல இயக்குநர்களுக்கு மத்தியில், அதிலும் பெண்களை கைவிட்டு எண்ணும் இக்காலகட்டத்தில் ஆகச் சிறந்த ஒரு நல்ல படைப்பாளியாக சுதா கொங்கரா இருக்கிறார். எடுத்த சில படங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர் இந்தப் படத்தில் விஸ்வரூபம் காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சாதியம், சமூக அவலம், பாரபட்சம், புறக்கணிப்பு, துரோகம், வலி, வேதனை, காதல், கனவு என எல்லாவற்றையும் எடுத்து அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டார்.
உடைத்து விட்டார் சுதா.. கண்களை குளமாக்கி விட்டார் சூர்யா.. ரசிகர்கள் சிலாகிக்கும் சூரரைப் போற்று!
சூர்யா
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைத்திருக்கிறார் சுதா.. கூடவே சூர்யா.. சாதா கதை கிடைத்தாலே சும்மா புகுந்து விளையாடுவார்.. இந்த மாதிரி கிடைத்தால் மனுஷன் சும்மா இருப்பாரா.. சதிராட்டம் போட்டிருக்கிறார்.. நம்ம சூர்யாவா இது என்று எல்லோரும் கொண்டாடும் அளவுக்கு பிரமிக்க வைத்திருக்கிறது சூர்யாவின் தேர்ந்த நடிப்பு.
கனவு
நடித்திருக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. மனுஷன் சோழவந்தான் காரனாகவே வாழ்ந்திருக்கிறார். சோழவந்தான் காரனுக்கு கனவு வரக் கூடாது.. வந்தால் அது நிறைவேறக் கூடாதா.. என்ற கேள்விகள் நமது மனதை பிசைந்து எடுக்கின்றன. தனக்குள் வரித்துக் கொண்ட கனவு நிறைவேற அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், படும் பாடும், சந்திக்கும் சர்ச்சைகளும், ரொம்ப அருமையாக நடித்திருக்கிறார் சூர்யா.
அப்பா
வாத்தியார் வீட்டுப் பிள்ளை.. அப்பாவிடம் உள்ள புரட்சிக் குணம் மகனுக்கும். ஆனால் அப்பா நிதானம் காட்டுகிறார்.. மகனுக்கோ இளம் ரத்தம்.. வேகமாக நிறைவேற வேண்டும் என்ற ஆசை.. எல்லாம் சேர்ந்து கரைபுரண்டு ஓடி முட்டி மோதும் உணர்வுகள்.. அப்பப்பா.. சூர்யா வாரிச் சுருட்டிக் கொண்டு போகிறார் பாராட்டுகளை.
பிச்சைக்காரன்
அப்பா முடியாமல் கிடக்கிறார்.. உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியும் சூழல்.. வெளியில் போய் மாட்டிக் கொள்கிறார். விமானம் ஏறி வரலாம் என்றால் கையில் டிக்கெட்டுக்கு காசு இல்லை.. அப்போது விமான நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்திருப்போர் கை கால்களில் விழுந்து ஒரு பிச்சைக்காரன் போல கதறுவார் பாருங்கள்.. மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது அந்தக் காட்சி. அந்த இடம்தான்.. நெடுமாறன் ராஜாங்கத்தின் கனவு மேலும் கெட்டிப்பட முக்கியக் காரணம்.
பயோ பிக்
இது பயோ பிக்கா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சுதாவின் கைவண்ணம் வெகு அருமையாக வந்திருக்கிறது. சாமானியனுக்கு அத்தனை சீக்கிரம் வசப்படாத ஒரு கனவை எப்படி அவன் கைப்பற்றுகிறான்.. வானத்தை தன் வசப்படுத்துகிறான் என்பதை ரொம்ப எதார்த்தமாக இயல்பாக கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் கனவு நாயகன் அப்துல் கலாம் கதாபாத்திரமும் வருகிறது.
கனவு
ஒரு பட்டிக்காட்டு இளைஞனாக மாறா.. அதாவது சூர்யா.. அவருக்கென்று கிடைத்த துடுக்கான எடக்கு மடக்கான பொண்டாட்டி.. அந்த பொண்டாட்டிக்கும் ஒரு அழகான கனவு.. பெரிய பேக்கரி வைக்க வேண்டும் என்று. இந்த பேக்கரியும், விமானமும் இணைந்து இழையோடும் காதலும்.. ஆஹா.. சிலாகிக்க வைத்துள்ளார் சுதா.. காதலையும் ஒரு கனவு போல அழகாக கொண்டு சென்றுள்ளார்.
பண்பட்ட நடிப்பு
புதுமுக நடிகையான அபர்ணா பாலமுரளி மிகப் பிரமாதமான நடிப்பை கொடுத்துள்ளார். ரொம்ப இயல்பு, எதார்த்ததனம், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு, கூடவே சூர்யாவுக்கு ஏற்ற ஜோடிப் பொருத்தம்.. கூடவே கருணாஸும். ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல நடிப்பு. ஊர்வசி மனதை வசீகரிக்கிறார் தனது பண்பட்ட நடிப்பால்.. நடித்துள்ள அத்தனை பேரையும் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் சுதா என்றுதான் சொல்ல வேண்டும்.
மாறாக்கள்
ஒரு பெருங்கனவின் தொடக்கம்.. மாறாக்களின் பிறப்புக்கு அஸ்திவாரமிடுகிறது.. இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட ஒரு தீராப் பெருங்கனவின் வெற்றியை மாறாவின் வெற்றி மூலம் சொல்லியிருக்கிறார் சுதா.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்க்க வேண்டிய நல்ல படம்தான். குறிப்பாக சூர்யாவுக்கு மிகச் சிறந்த கம்பேக் இது என்பதில் சந்தேகமில்லை. தமிழக மக்களின் மனதில் மேலும் ஒரு படி உயரப் போகிறார் சூர்யா.