கண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார்.. அடித்துச் சொல்லும் ஸ்வேதா சுதாகர்!
சென்னை: வருங்காலத்தில் திருநங்கைகள் சமூகத்தினர் முதல்வராக வர வேண்டும் என பார்ன் டூ வின் என்ற அமைப்பின் தலைவரும் திருநங்கைகயுமான ஸ்வேதா சுதாகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான ஸ்வேதா சுதாகர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் சாதிக்க பிறந்தவர்களின் சமூக அமைப்பின் நிறுவனர், இயக்குநராக உள்ளேன். திருநங்கைகளுக்கான முதல் தேவை அவர்களுடைய வாழ்வுரிமை.
இது மிகவும் முக்கியம். இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கான அடையாளப்படுத்தும் போது அதற்கான வேற்று கருத்தாக பார்க்கக் கூடிய சமூக இன்று நிறைய இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. வாழ்வுரிமை நிலையானதாக இருந்தால் அது முதல் தேவையாக நான் கருதுகிறேன்.
திருநங்கைகள்
திருநங்கைகளுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. ஒரு ஷாப்பிங் சென்றாலே எந்த கழிப்பறையை பயன்படுத்துவது என்பது உள்ளது. மாற்று அறுவை சிகிச்சை செய்த திருநங்கைகளை நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களால் சிறுநீரை நீண்ட நேரம் அடக்க முடியாது. பொது இடத்திற்கு செல்லும் திருநங்கைகள் கழிவறை இல்லாததால் கடும் அவதியடைகிறார்கள்.
திருநங்கைகளுக்கான கழிவறை
பெண்களின் கழிவறைக்குள் திருநங்கைகள் சென்றால் வேற்று கிரகவாசிகளை போல் பார்க்கிறார்கள். அது போல் இல்லாமல் இனி வரும் காலங்களில் பொதுவான தளமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். எந்த அரசாங்கம் எது செய்தாலும் கோஷமிடுவதால் மட்டும்தான் இந்த அரசாங்கம் இது செய்தது வழிமொழிந்து கொண்டே வருவார்கள். எந்த அரசாங்கமும் இதுவரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சரிவர ஒரு திட்டத்தை வழிவகுத்து அதை செய்து நடுநிலையா கொண்டு போய் இருக்கிறார்கள் என்றால் அது இல்லை.
திமுகவுக்கு நன்றி சொன்ன திருநங்கை
இந்த நேரத்தில் திமுகவுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அலி, அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என அழைக்கப்படுகிறார்கள். திருநங்கைகளுக்கான நல வாரியத்தையும் கருணாநிதி அமைத்து கொடுத்தார். இருந்தாலும் எங்களுக்கான தேவைகளை இன்னும் யாரும் நிறைவேற்றவில்லை.
ராஜாக்கள் காலம்
வருங்காலங்களில் கண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார் என நான் நம்புகிறேன். அந்த காலத்தில் அதாவது ராஜாக்கள் காலத்தில் அரசை ஆண்ட ஆட்சியாளர்களாக திருநங்கைகள் திகழ்ந்திருந்தார்கள். எனவே கண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார். அதற்கு முன்னால், அனைத்து கட்சிகளும் அனைத்து திருநங்கைகளையும் ஒன்று சேர்ந்து வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும்.
விதவைகள்
பெண்கள், விதவைகள், குழந்தைகள் என கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதில் 30 சதவீதமாவது திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும். வாழ்க்கை தர மேம்பாட்டுக்காக அவர்களுடைய தேவையை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். திருநங்கைகளை திருநங்கைகளாக பார்க்காமல் மனிதர்களாக பாருங்கள். தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் திருநங்கைகள் பணிநியமனம் செய்யப்பட வேண்டும்.
சமூகப் பணிகள்
அரசியலில் திருநங்கைகள் களம் இறங்குகிறார்கள் என்றால் அதை வரவேற்க வேண்டும். எங்களது அமைப்பில் எங்களை நாடி வரும் திருநங்கைகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம். அது போல் தகப்பன் இல்லாமல் தாயால் வளர்க்கப்படும் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஊட்டச்சத்து சப்ளிமென்ட் தருகிறோம். கைதட்டி காசு வாங்குபவர்கள்தான் திருநங்கைகள் என சொல்லக் கூடிய இந்த சமூகத்தில் திருநங்கைகளாலும் பொதுமக்களும் உதவ முடியும் என்பதற்காக சமூகப் பணிகளை செய்து வருகிறோம்.
திருநங்கைகள் நல வாரியம்
தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு மற்ற மாநிலங்களில் திருநங்கைகளுக்கு நல வாரியம் வைத்துள்ளார்கள். பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய காலம் போய் இப்போது திருநங்கைகள் முன்னேற்றம் என பேசுவதற்கு காரணம் எங்களுடைய திறமையும் அறிவும்தான். திருநங்கைகள் மிரட்டி காசு கேட்பது குறித்து சொல்கிறார்கள். ஆண்கள், பெண்களில் திருடர்கள், மொல்லமாரிகள் இருப்பது போல் திருநங்கைகளிலும் இருக்கிறார்கள்.
தவறு செய்யாத மனிதர்கள் யாரு
சில இடங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்யும். தவறு செய்யாதவர்கள் மனிதர்கள் கிடையாது. ஒரு சிலர் தப்பு செய்வதால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லாதீர்கள். திருநங்கைகளிடத்திலும் ஈரம் உள்ளது. சிறு வயது முதலே காயப்பட்டு காயப்பட்டு இழிவுகளை சுமந்து அது கோபமாக மாறுகிறது. அதுவே எங்களே மீது அராஜகமாக திணிக்கப்படுகிறது. பெற்ற தாய், தகப்பனே எங்களை பற்றி புரிந்து கொள்ளாததால்தான் நிறைய திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
50 சதவீதம்
தனது குழந்தை பெண்ணாக மாறினாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறும் போக்கு 25 சதவீத பெற்றோருக்கு உள்ளது. இது 50 சதவீதமாக மாற வேண்டும், 50 சதவீதம் 100 சதவீதமாக மாற வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளை கைவிட்டுவிட்டால் அவர்களை யார் அரவணைப்பார்கள்? யார் அன்பு செலுத்துவார்கள்?
வாய்ப்பு
ஒரு தலை ராகம், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட படங்களில் வரும் பாடல்களை வைத்து திருநங்கைகளை கேலி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது நடக்காமல் இருக்க வேண்டும். சினிமா துறையில் ஒரு திருநங்கைக்கு இயக்குநர் மிஸ்கின் வாய்ப்பு கொடுத்திருந்தார். அது போல் காஞ்சனா படத்திலும். ஆனால் இவையெல்லாம் ஒரு முறை மட்டுமே வாய்ப்புகளாக உள்ளது. இது பல முறை வாய்ப்புகளாக மாற வேண்டும்.
மனிதாபிமானம் இல்லை
திருநங்கை கேரக்டரில் நடிக்க வைக்க ஒரு நல்ல ஆண்மகனை அழைத்து வந்து அவருக்கு வேடமிட்டு நடிக்க வைப்பது ஒரு நல்ல படமும் இல்லை, அதை எடுப்பவர்களுக்கு மனிதாபிமானமும் இல்லை. திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும். திருநங்கைகளுக்கான அடையாள அட்டையை ஆதாருக்கு நிகராக ஆவணப்படுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன் என்றார் ஸ்வேதா சுதாகர்.