ரஷ்ய தொழில்நுட்பத்தில் தயாராகும் நவீன T-90 பீஷ்மா பீரங்கிகள்.. விரைவில் ராணுவத்தில் இணைப்பு
சென்னை: ரஷ்ய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ள 464 பீரங்கிகள், இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன. இந்த பீரங்கிகள் HVF எனப்படும் சென்னையை அடுத்துள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக ரூ.13,448 கோடி மதிப்பீட்டில், 464 பீரங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. அண்டை நாடுகளின் அச்சுறுதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இதனை சமாளிக்கும் வகையில், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப, நமது ராணுவத்தையும் நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக, தற்போது T-90 பீஷ்மா என பெயரிடப்பட்டுள்ள பீரங்கிகளை தயாரித்து, அவற்றை இந்திய ராணுவத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த T-90 வகை பீரங்கிககள் ஒன்றும் சாதாரணமானது இல்லை. ரஷ்ய ராணுவத்தில் இந்த பீரங்கிகள் முதன்மையானதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகை பீரங்கிகளை இந்திய ராணுவத்தில் சேர்க்க கடந்த 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தப்படி ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்பங்களை வாங்கி, T-90 பீரங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு மேலும் உறுதிசெய்யப்படும் என ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.