அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசவேயில்லை... அதிரடி பல்டியடித்த தமாகா
சென்னை:அதிமுகவிடம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 சீட், ஒரு மாநிலங்களவை எம்பி பதவி, பாஜவுக்கு 5 இடங்கள் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம், சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் கையெழுத்தானது.
உடன்பாட்டில் ராமதாஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளாலும்... அவரது இந்த கூட்டணி முடிவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தேமுதிகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
அதே நேரத்தில் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந் நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் அடிப்படையில் இந்த இரு கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும்... சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் தமாகா பொது செயலாளர் விடியல் சேகர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை திட்டவட்டமாக தமாகா மறுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு மட்டும் தான் உள்ளது. எனவே... பேச்சுவார்த்தையில் தாம் ஈடுபட்டு வருவதாக செய்தி வருவது உண்மைக்கு புறம்பானது.
தமாகா தலைவர் என்னை யாரிடமும் கூட்டணி குறித்து பேச சொல்லவில்லை. எனவே, அதிமுக கூட்டணி குறித்து நான் பேசியதாக வெளி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.