'ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது.. எனது செல்போன் திருட்டு''.. நடிகர் விமல் போலீசில் பரபரப்பு புகார்!
சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் செல்பி எடுத்த நேரத்தில் தனது செல்போனை யாரோ திருடிவிட்டதாக நடிகர் விமல் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் விமல் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 12--ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுக்க விரும்பினார்கள் இதற்கு நான் சம்மதம் தெரிவித்தவுடன் ரசிகர்கள் என்னிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு ஒரு இடத்தில் வைத்திருந்தேன்.
செல்பி எடுத்து முடித்தவுடன் திரும்பி வந்து பார்த்தபோது எனது செல்போன் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 3 நாட்களாக அங்கு எங்கு தேடி பார்த்தும் செல்போன் கிடைக்கவில்லை. யாரோ எனது செல்போனை திருடிச்சென்று விட்டனர். எனவே காவல்துறையினர் எனது செல்போன் கண்டுபிடித்து மீட்டுத் தரும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் விமல் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விமல் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமல் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இறுகும் பிடி.. ராஜேந்திர பாலாஜியை நெருக்கும் ஊழல் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் செப்.20-ல் விசாரணை