ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை... இன்று முதல் ஒலிக்கும் தமிழ் மந்திரங்கள்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.
சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழ் மந்திரங்கள் தமிழக கோவில்களில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. கோவிலுக்கு செல்வோர் தமிழில் அர்ச்சனை செய்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளலாம். இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் மக்களுக்கு அந்த மந்திரங்களின் அர்த்தமும் புரியும். அந்த மந்திரங்களின் சக்தியும் மக்களுக்குத் தெரியும்.
Recommended Video
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, முதல்கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரியகோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள539 முக்கிய கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை'செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறினார்.
இதற்காக, முருகன், விநாயகர், பெருமாள், சிவன், அம்மன் எனதனித்தனி கடவுள்களுக்கு ஏற்றவகையில் போற்றிப் புத்தகங்கள் தனித்தனியாக 14 வகைகளில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இன்று அன்னை தமிழில் அர்ச்சனை.. விரைவில் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி
தமிழகத்தில் உள்ள கோயில் களில் இனி தமிழில் குடமுழுக்கு நடைபெறுமா? என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்பகுதியில் உள்ளபெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் அக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யப்படும். எந்தவிதமான சச்சரவுக்கும் இடமில்லாமல், யார் மனதும் புண்படாமல் ஆகம விதிகளை பின்பற்றி முறையாக குடமுழுக்கு அனைத்து கோயில்களுக்கும் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோவில்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஆடி மாத திருவிழாக்களை மனதில் வைத்துதான் சில கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா காலகட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகள் வந்தால், அந்த வழிபாட்டுத்தலங்களும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்.
அன்னை தமிழில் அர்ச்சனை 50 ஆண்டு கால போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. 1955ஆம் ஆண்டில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்துள்ளன. பல போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
கடந்த 1969ஆம் ஆண்டில் லால்குடியில் பூவாளூரில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதற்கான விழா அப்போதைய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும் தற்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கம் தலைமையில் நடந்துள்ளது.
அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவது என்பது வீட்டில் பூஜை செய்வதை காட்டிலும் சக்தி பெற்றது. அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனங்களாலும், பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாகும். சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். தங்களின் பிறந்தநாளிலும் ஜென்ம நட்சத்திர நாளிலும் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மையைக் கொடுக்கும். இதன் மூலம் இறை அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று முதல் தமிழக ஆலயங்களில் அன்னைத் தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப் போகின்றன. இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் மக்களுக்கு அந்த மந்திரங்களின் அர்த்தம் புரியும். அந்த மந்திரங்களின் சக்தியும் மக்களுத் தெரியும்.