ப.சிதம்பரம் விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை... இலக்கியவாதிகள் கண்டனம்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டன அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி வரை அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல முறை ஜாமீனுக்கு முயற்சித்தும் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராசன், ராஜேந்திரன், கவிஞர்கள் சல்மா, ஏகாதேசி, இலக்கியா நடராஜன், பதிப்பக உரிமையாளர்கள் விஜயா வேலாயுதம், கவிதா சேது சொக்கலிங்கம் ஆகியோர் ஒன்றாக ஒரு கண்டன கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், ப.சிதம்பரம் அரசியல்வாதி மட்டுமல்ல மிகச்சிறந்த இலக்கியவாதியும் கூட என்றும், இலக்கியவாதிகளின் குருவாக திகழும் ''இலக்கியச் சிந்தனை'' அமைப்பின் நிறுவனர் அவர் எனவும் தெரிவித்துள்ளனர். ''எழுத்து'' என்கிற இலக்கிய அமைப்பினை நிறுவி நிகழ்கால தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்து வருபவர் ப.சிதம்பரம் என்றும் கூறியுள்ளனர்.
ப.சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என அவரே மறுத்து வரும் நிலையில், ஆளுகிற அரசு சிதம்பரம் மீது பொய் வழக்குகளை புனைந்து தொடர்ந்து அவருடைய பினையினை மறுத்து வருகிற போக்கை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.