தஞ்சையில் வாசனுக்கு சிக்கல்.. சைக்கிளை பறிக்கிறது தேர்தல் ஆணையம்.. தலையிட ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு, சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து தஞ்சாவூரில் களமிறங்கியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அங்கு போட்டியிடுகிறார்.
2014 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கிய ஜி.கே. வாசன் தங்களுக்கு, நிரந்தரமாக, சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!
இந்த நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறைந்தது இரு தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
தஞ்சை தொகுதியில் மட்டுமே தமாகா, போட்டியிடும் நிலையில் இந்த நிபந்தனையை எதிர்த்து ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
நிரந்தரமாக தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம், ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படை மனு மீதான விசாரணை, தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. எனவே தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைத்தது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.