த.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

71 வயதாகும் பி.எஸ்.ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து இரண்டு முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது அவருடன் ஞானதேசிகன் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார்,
இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பி.எஸ்.ஞானதேசிகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன் இன்று காலமானார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஞானதேசிகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.