ராஜ்யசபா சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் தமிழ் மகன் உசேன்.. ஜெ., சமாதிக்கு செல்கிறார்.!
Recommended Video
சென்னை: அதிமுக மூத்த உறுப்பினரான தமிழ் மகன் உசேன் இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுக 3 உறுப்பினர்களையும் அதிமுக 3 உறுப்பினர்களையும் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இதனடிப்படையில் திமுக சார்பாக சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். நேற்று சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பாக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் மாநிலங்களவை வேட்பாளர்களாக நேற்று அறிவிக்கப்பட்டனர். கூட்டணி ஒப்பந்தப்படி மீதமிருந்த ஒரு இடத்தை பாமக-விற்கு கொடுத்தது அதிமுக. இதனையடுத்து பாமக சார்பாக மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிடுவதால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே, போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினர்களாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் அதிமுக கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது
தம்பிதுரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்கள் தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு கிடைக்கும் என காத்திருந்தனர். இதில் அன்வர் ராஜா மற்றும் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த தலைவர்களும் அடக்கம்.
சில நாட்களுக்கு முன் வெளியான தவலின் படி தமிழ் மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி என கூறப்பட்டது. ஆனால் தமிழ் மகன் உசேனுக்கு சீட் கொடுப்பதில் அன்வர் ராஜாவிற்கு உடன்பாடில்லை என தெரிய வந்தது. இருவருமே அதிமுகவில் மிக மூத்தவர்கள் என்பதால் ஒருவரை விட்டு ஒருவருக்கு சீட் தர முடியாது என்ற சூழலை உணர்ந்தது அதிமுக தலைமை.
இதனையடுத்தே தமிழ் மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட் வாய்ப்பு தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மிகுந்த எதிர்பர்ப்புடன் இருந்து ஏமாற்றத்திற்குள்ளான உசேன், இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சென்று அஞ்சலி செலுத்தியபின் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழ் மகன் உசேன் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தலைமை மீது பரபரக்கும் குற்றச்சாட்டுகள் ஏதேனும் தெரிவிக்க போகிறாரா, அல்லது வேறு ஏதேனும் அதிரடி முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.