அதிமுகவிடம் பேசுவது எனது பொறுப்பு... கட்சியினருக்கு நம்பிக்கை அளித்த ஜி.கே.வாசன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை மட்டும் நிர்வாகிகள் தன்னிடம் கூறினால் போதும், அந்த இடங்களை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெறுவது தனது பொறுப்பு என த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் என வாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக.. தேர்தலுக்கு முன் மேலும் பல அதிரடிகள் வெயிட்டிங்?
ஆலோசனை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார் ஜி.கே.வாசன். அப்போது பேசிய அவர், அதிமுகவிடம் பேசி இடங்களை பெறுவது பற்றி யாரும் கவலைக் கொள்ளத்தேவையில்லை என்றும், அது தனது பொறுப்பு எனவும் கூறினார்.
தகவல் கூறவும்
மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் எந்தெந்த வார்டுகள் த.மா.கா.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடம் என்பது பற்றி முன்கூட்டியே பட்டியல் தருமாறு கேட்டுக்கொண்டார். அதிமுகவுக்கு எந்த தர்மசங்கடத்தையும், இடையூறையும் கொடுக்காதவர்கள் நாம் என்பதால் நமக்கு அவர்கள் அதிகளவில் சீட் தருவார்கள் எனப் பேசினார்.
உரிய அங்கீகாரம்
சட்டமன்றத் தேர்தலுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அச்சாரமாக அமையும் என்றும், த.மா.கா.வுக்கு அதிமுக உரிய அங்கீகாரம் தரும் என்பதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் ஜி.கே.வாசன் கூறினார்.
3 நாட்கள்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வரும் 28-ம் தேதி விருப்பமனுக்கள் பெற்று அதை 30-ம் தேதி அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார் ஜி.கே.வாசன்.