உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மனகசப்பால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் ஜி.கே.வாசன். தொடக்கத்தில் அவருடன் இருந்த திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தொட்டியம் ராஜசேகரன், மகேஷ்வரி உள்ளிட்டோர் த.மா.கா.விலிருந்து வெளியேறி அதிமுகவிலும், அமமுகவிலும் ஐக்கியமாகி விட்டனர்.
இந்நிலையில், ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், ஈரோடு யுவராஜ் ஆகியோர் மட்டுமே இப்போது வாசனுடன் உள்ள முக்கிய நிர்வாகிகள் என்று கூறலாம். சோதனையான காலக்கட்டத்திலும், த.மா.கா. அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் நிலையிலும் கூட இவர்கள் நால்வர் மட்டுமே ஜி.கே.வாசனுக்கு படைத்தளபதிகளாக திகழ்கின்றனர்.
ஆமாம்.. திமுகவிடம் பணம் வாங்கினோம்... இந்திய கம்யூ.டி.ராஜா ஒப்புதல்
இந்நிலையில் துவண்டு கிடக்கும் கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜி.கே.வாசன். சித்தப்பா மறைவு, தாயார் மறைவு என அடுத்தடுத்து வீட்டில் துக்க நிகழ்வுகள் நடந்ததால் கடந்த இரண்டு மாதகாலமாக சுற்றுப்பயணத்தை குறைத்திருந்தார் ஜி.கே.வாசன். இந்நிலையில் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி ஈரோட்டில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.
அதில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அதை தாம் பார்த்துக்கொள்வதாகவும், அதற்கான பணிகளை மட்டும் இப்போதே தொடங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.