சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய “கீழடியில் கிளைவிட்ட வேர்” கருத்தரங்கம்
சென்னை: சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய "கீழடியில் கிளைவிட்ட வேர்" - சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் மாநாட்டைப் போல் எழுச்சியாக நடைபெற்றது.
தமிழர் தொன்மை நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை "கீழடியில் கிளைவிட்ட வேர்" என்ற தலைப்பில் "சிறப்புக் கருத்தரங்கை நேற்று நடத்தியது. சென்னை பெரியமேடு "தி சால்வேசன் ஆர்மி" அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் முழுநிலவன் தலைமை தாங்கினார்.
அகழாய்வு தொடங்கியது எப்படி?
கீழடியின் வரலாறு மறைக்கப்படுவது குறித்து தனது தலைமையுரையில் முழுநிலவன் விளக்கினார். த.க.இ.பே. தலைவர் கவிபாஸ்கர், கீழடி அகழாய்வு எப்படி தொடங்கியது என்பது குறித்து விவரித்தார்.
கண்காட்சி திறப்பு
கீழடித் தொன்மை" என்ற தலைப்பிலான, புகைப்பட கண்காட்சியை நடிகர் பொன்வண்ணன் திறந்து வைத்து உரையாற்றினார். இக்கண்காட்சியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன.
மணியரசன் உரை
"மாண்டவர்களின் மறுபிறப்பு" என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேசினார். கீழடிக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இன்னும் உள்ள தொல்லியல் ஆய்விடங்களுக்கு இன்று பெரும் எண்ணிக்கையில் செல்லும் இளையோர், நமது தமிழர் தொன்மை நாகரிகத்தை புரிந்து கொண்டு பரப்புவதோடு, உரிமை பெற்ற தமிழர்களாக எதிர்கால மக்கள் வாழ்வதற்குப் பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன்
"மண்மூடிய தமிழர் வாழ்வு" என்ற தலைப்பில், கீழடியை அகழாய்வு செய்து வெளிப்படுத்திய இந்தியத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். கீழடிக்கு முன்னதாக வைகை ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு தமது வீட்டில் கிடைத்த கருப்பு சிவப்பு வகை சிறிய வகைத் தாழியைக் கொண்டு வந்து அளித்த ஒரு முதியவரின் படத்தை முதல் முறையாக வெளியிட்டு, இவர்களைப் போன்றோர்தாம் இந்த ஆய்வுக்கு உதவிகளைச் செய்தனர் என்று தெரிவித்தார்.
தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. யோகீசுரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.