தமிழ்நாடே எனது தாய்நாடு.. முழங்கிய கணேசமூர்த்தி.. மாஸ் கோஷங்களால் லோக்சபாவை கலக்கிய தமிழக எம்பிக்கள்
Recommended Video
சென்னை: 17வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று லோக்சபாவில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று வரிசையாக பதவியேற்றனர்.
திமுக எம்பிக்கள் பதவியேற்கும்போது, வாழ்க கலைஞர் புகழ் என்றும், ஸ்டாலினையும் வாழ்த்தி சில வார்த்தைகள் சொல்ல மறக்கவில்லை. அனைவருமே தமிழில் உறுதிமொழி எடுத்தது மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
திமுக கூட்டணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் தொகுதி எம்.பியான கொங்கு மக்கள் தேசிய கட்சியின், ஏ.கே.பி.சின்ராஜ் பதவியேற்றபோது, தங்கள் கட்சிக் கொடியை, சால்வையாக தோளில் சுற்றிப் போட்டபடி வந்தார்.
தீரன் சின்னமலை
அவர் உறுதிமொழி ஏற்கையில், "மக்கள் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, சின்ராஜ் பழனியப்பன் எனும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால், உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளும் கடமையை உளமாற மேற்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். வாழ்க தமிழ், வாழ்க தீரன் சின்னமலை, வாழ்க காலிங்கராயன், வாழ்க கோவைச் செழியன் என்றார்.
தமிழ்நாடே எனது தாய்நாடு
இதேபோல, தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மதிமுகவின், ஈரோடு தொகுதி எம்பி, கணேசமூர்த்தி, "தமிழ்நாடே எனது தாய்நாடு. தாய்நாட்டின் உரிமை காப்போம்" என்று அதிரடியாக தெரிவித்தார்.
மதச்சார்பின்மை
திருப்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், கே.சுப்பராயன் பதவியேற்று முடிந்ததும், மதச்சார்பின்மை நீடூழி வாழ்க, இந்தியா நீடூழி வாழ்க என முத்தாய்ப்பாய் கூறிச் சென்றார்.
உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்
கோவை லோக்சபா தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யான நடராஜன், சிவப்பு துண்டை கழுத்தை சுற்றி அணிந்திருந்தார். எம்.பி.யாக, உறுதிமொழியேற்ற பிறகு, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்று அரைகூவல் விடுத்தார். "உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்று, அதுதான் நாம் உழைக்கும் மக்களின் தற்போதைய தேவையும் கூட" என்பது காரல் மார்க்ஸின் கல்லறை வாக்கியமாகும்.
தமிழ் வாழ்க
பொள்ளாச்சி தொகுதி திமுக எம்பி சண்முக சுந்தரம் பதவியேற்ற பிறகு, தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என மூன்றுமுறை, கோஷமிட்டார். கன்னியாகுமரி தொகுதி எம்பி, வசந்தகுமார் பதவியேற்கும்போது, தனது பெயரை குறிப்பிடும்போது, நாடார் என்பதையும் சேர்த்தே கூறினார். மேலும் பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜிவ் காந்தி புகழ் வாழ்க என்றார். தமிழக எம்பிக்கள் தமிழை வாழ்த்தி பதவியேற்றபோது, பாஜக எம்பிக்கள் கேலியும், கிண்டலும் செய்து கோஷமிட்டதை பார்க்க முடிந்தது.