மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.. 10 நாட்களில் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டம்
சென்னை: மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களை தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக மார்ச் 24 ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்கள், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனிநபர் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறப்பு, திருமணம், அவசர மருத்துவம் இந்த மூன்று விஷயங்களுக்கு தவிர எதற்காகவும் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீட்டின் முன்பே வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பிரச்னை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் தேர்வு நடைபெறுமா என்கிற அளவுக்கு சந்தேகம் எழுந்தது. ஊரடங்கும் ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அருகில் வருகிறது. ஏனெனில் இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. சுமார் 730பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுமார் 70 ஆயிரம் தற்போது வரை வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இதனால் 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கையும் அண்மையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மே மாதத்தில் 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.