தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.. ஒத்திவைப்பு.. பள்ளிகல்வித்துறை விளக்கம்
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்றும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மறுதேதி ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக மார்ச் 24 ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பிரச்னை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் கொரோன வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் தேர்வு நடைபெற வாய்ப்பில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. ஊரடங்கும் நாளையுடன் முடிவதாக இருந்த நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று மக்களிடம் தகவல்கள் பரவியது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்றும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மறுதேதி ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மே மாதத்தில் 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.