விலை கிடைக்க கவனிக்க வேண்டிய 3 அம்சங்கள்.. வேளாண் மசோதா குறித்து ககன்தீப் சிங் பேடி முக்கிய தகவல்
சென்னை: தரம், எண்ணிக்கை, விலை ஆகிய மூன்று விஷயங்கள் குறித்து விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உரிய விலை கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தம், விவசாய விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் தொடர்பாக, மூன்று சட்டங்களை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அவசர சட்டங்களுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சட்டங்களால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு உள்ளதாகவும், குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் போர்க்கொடி உயர்த்தி போராடி வருகின்றன.
'பாரத் பந்த்'- தமிழகத்திலும் வெடித்தது போராட்டம்- வேளாண் சட்ட நகல்கள் எரிப்பு- ஆயிரக்கணக்காணோர் கைது
இந்தியாவின் முதல் மாநிலம்
இந்நிலையில் சென்னையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேளாண் சட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேசும் போது , விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தம் சட்டத்தை பார்த்தோம் என்றால், தமிழகம் தான் முதல்முதலாக ஒப்பந்த சாகுபடி திட்டத்தை கொண்டு வந்த இந்திய மாநிலம் ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
ஒப்பந்தம் போடலாம்
அந்த சட்டத்தின் பெரும்பாலான விதிமுறைகள் தான் மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டு வந்துள்ள விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தில் இருக்கின்றன. இந்த சட்டம் நம்முடைய விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். பண்ணை ஒப்பந்தத்தை கொஞ்சம் விளக்கமாக பார்த்தோம் என்றால், இப்போது விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளார்கள் என்றால், அதை இரண்டு மூன்று கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் நீங்க எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். நாங்கள் கிலோவுக்கு 15 ரூபாய் (உதாரணம்) கொடுக்கிறோம் என்று உணவு உற்பத்தி நிறுவனங்கள் தருவதாக வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் ஒப்பந்தம் போடலாம்.
தரம் எண்ணிக்கை
ஆனால் தக்காளி விற்பனைக்கு வரும் போது 10 ரூபாய் தான் போகிறது என்றாலும் ஒப்பந்தம் காரணம் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டார்களோ அந்த விலைக்கு அவர்கள் தந்தாக வேண்டும். ஆனால் மார்க்கெட் விலை கூடுதல் இருந்தால், அதையும் அவர்கள் கொடுத்தாக வேண்டும். அதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். தரம், எண்ணிக்கை, விலை ஆகிய மூன்று விஷயங்கள் குறித்து விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உரிய விலை கிடைக்கும்.
விவசாயிகளை பாதுகாக்கும்
விவசாயிகள் உணவு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு விற்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவர்கள் விருப்பப்படி இப்போது உள்ள முறையிலும் விற்கலாம். ஒப்பந்தம் போட்டால் உரிய விலை கிடைக்கும். ஒப்பந்தம் போடாத நிலையில் விலை குறைந்தால் ஒரு வழியும் இல்லை. யாரிடமும் முறையிட முடியாது. விவசாயிகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவுமே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது " என்றார்