இலங்கை தாக்குதல் முக்கிய குற்றவாளி செல்போனுக்கு தமிழகத்திலிருந்து சென்ற அழைப்புகள்.. பகீர் பின்னணி
Recommended Video
சென்னை: இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பின்னணியில், தமிழகம், கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களில், 350க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள போதிலும், உள்ளூரில் அதை செயல்படுத்தியது என்னவோ, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புதான்.
செல்போன்
இந்த அமைப்பின் தலைவர் ஜஹாரன் ஹசிம், தாக்குதலின் மூளையாக செயல்பட்டவராகும். இவர் தற்கொலைப் படை தாக்குதலின்போது, இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். இந்த நிலையில், ஜஹாரன் ஹசிம், செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பு ஹிஸ்ட்ரியை, போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், கேரளா
அவரது போனுக்கு, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து பல்வேறு நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்துள்ள தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தங்கியிருந்தார்
கடந்த வருடம் இறுதியில், சுமார் 3 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பின்னணியில், இந்தியாவின், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கேரளாவை சேர்ந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது. இவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவர் என்று தெரியவந்துள்ளது. பாலக்காட்டை சேர்ந்த அவர் பெயர் ரியாஸ் அபுபக்கர்.
பேச்சுக்கள்
ஜஹரன் ஹசிம் வெளியிட்ட வீடியோக்கள், மற்றும் அவரது பேச்சால், தான் ஈர்க்கப்பட்டதாக ரியாஸ் அபுபக்கர், போலீசாரிடம், தெரிவித்துள்ளார். இதேபோல மேலும் சில வெளிநாட்டு முக்கிய முஸ்லீம் அமைப்புகளின் பேச்சாளர்களின் பேச்சுக்களையும் கேட்டு தான் ஈர்க்கப்பட்டதாக அபுபக்கர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் விசாரணை வளையம்
மற்றொரு திடுக்கிடும் தகவலை அபுபக்கர் வெளியிட்டார். இலங்கை போலவே, கேரளாவிலும், தற்கொலைப் படை தாக்குதலை நடத்த தான் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதை தேசிய புலனாய்வு முகமை, ஐஜியான அலோக் மிட்டல் உறுதி செய்துள்ளார். கேரளாவை போலவே தமிழகத்திலும், ஜகரன் ஹசிமுக்கு ஆதரவாளர்கள், பின்பற்றுவோர் இருக்க கூடும் என தெரிவதால், விசாரணை பாதை தமிழகம் நோக்கியும் திரும்பியுள்ளது.