அதிமுகவிற்கு தேமுதிக கொடுத்த 2 ஆப்சன்கள்... கேட்டது கிடைக்குமா? - நீடிக்கும் இழுபறி
அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. பாமகவிற்கு இணையான தொகுதிகளைக் கேட்டு தேமுதிக அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. 41 இடங்கள் என்ற நிலையில் இறங்கி வந்த தேமுதிக, பாமகவிற்கு இணையாக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது. அப்படி கொடுக்காவிட்டால் 20 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. அப்போது அந்த கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவரானார்.
இறங்கியே வராத தேமுதிக
கடந்த 2016ஆம் ஆண்டு தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டது. மதிமுக, தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட்கள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அனைவருமே படுதோல்வி அடைந்தனர். அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அனைவரும் இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர். 41 தொகுதிகள் வேண்டும் என்பது தேமுதிகவின் நிலைப்பாடாக இருந்தது. இதனை கண்டு கொள்ளாத அதிமுக முதலில் பாமக உடன் தொகுதி பங்கீடை உறுதி செய்தது.
தனித்து போட்டி
அதிமுக கண்டு கொள்ளவில்லையே என்று விரக்தியடைந்த பிரேமலதா விஜயகாந்த், தனித்து போட்டியிட்டாலும் 10 சதவிகித வாக்குகளை பெறுவோம் என்று சொன்னார். விஜயபிரபாகரனோ, ஒரு படி மேலே போய், தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று சொன்னார். இந்த பேச்சுக்கள் அதிமுக தலைமையை உரசிப்பார்த்தது.
தேமுதிக உடன் தொகுதிப்பங்கீடு
பாமக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிக உடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுத்து உள்ள நிலையில் எங்களுக்கும் அதற்கு இணையாக தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
கேட்டது கிடைக்குமா?
23 இடங்களை கொடுக்கா விட்டால் 20 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் தர வேண்டும் என்பது தேமுதிகவின் அடுத்த ஆப்சனாக உள்ளது. அதற்கு அதிமுக தரப்பில் 10 சீட் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதில் பிரேமலதாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இதனால்தான் தனித்து போட்டியிட்டால் கூட 10 சதவிகித வாக்குகளை பெறுவோம் என்று கூறியிருக்கிறார் பிரேமலதா.
போட்டி போட்டு கூட்டணிக்கு அழைத்த கட்சிகள்
தேமுதிகவிற்கு கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது தனி செல்வாக்கு இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தானாக கூட்டணிக்கு விரும்பி அழைத்தார். ஆனால் விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்தார். 2016 ஆம் ஆண்டு மூன்றாவது அணியின் தலைவரானார். படிப்படியாக வாக்கு சதவிகிதம் சரிந்து போனதால் தேமுதிகவின் செல்வாக்கும் படிப்படியாக சரிந்து விட்டது. எப்படி இருந்த தேமுதிக இப்படி ஆகி விட்டதே என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டது.
எந்த தொகுதியில் யார் போட்டி
தேமுதிகவில் விருப்பமனு வாங்கப்படுவதாக அறிவித்தாலும் மனு கொடுக்க பெரிய அளவில் யாரும் முன் வரவில்லை. தேமுதிகவில் கேட்ட தொகுதிகள் கிடைக்காது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கொடுக்கும் தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருக்குமா என்பதும் தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.