சட்டசபைத் தேர்தல் 2021: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார் சத்யபிரதா சாகு.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
சட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு
இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாக அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சத்யபிரதா சாகு விளக்கம் அளிக்கிறார்.