தமிழக சட்டசபை தேர்தல் 2021.. பாஜக வைத்த குறி.. எங்கு தெரியுமா.. செம்ம பிளான் ரெடி!
சென்னை: தமிழகத்தில் எப்படியும் கால் ஊன்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வரும் பாஜக இந்த முறை அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் அதிக இடங்களில் வென்று வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பெரும் திட்டத்தை தயாரித்துள்ளது பாஜக.
பாஜக கால் ஊன்ற மிகவும் கடினமாக உள்ள மாநிலங்கள் என்றால் அது தமிழகம், கேரளா மட்டுமே. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் நோட்டோவிற்கு கீழ் இருந்தது.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளே கூட நோட்டோவிற்கு கீழ் பாஜகவின் இருப்பதாக முணுமுணுத்தும் வந்தன. அதிமுக தங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் அதன் கூட்டணி கட்சிகளே கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஆதங்கத்தை அதிமுகவிடம் கொட்டின. அந்த அளவிற்கு நிலைமை இருந்தது.
தலைவர்கள்
ஆனால் அதன்பிறகு நடந்தது எல்லாம் வேறலெவல். பாஜகவில் ஏராளமான அரசியல் கட்சி பிரபலங்கள் சேர்ந்தனர். அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, காங்கிரஸ் என பல்வேறு கட்சி பிரபலங்கள் இணைந்தனர். மேல்மட்ட தலைவர்கள் என்று இல்லை- அடிமட்ட அளவிலும் நிர்வாகிகள் சேர்ப்பு மாவட்ட வாரியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமாக நடந்தது என்பது உண்மை.
அதிக கவனம்
பாஜக இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் இந்து மத உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியது. பாஜக நடத்திய வேல் யாத்திரை பெரிய அளவில் பேசப்பட்டது. கடைசியில் தைபூசத்திற்கு விடுமுறை விடும் அளவிற்கு பாஜகவின் முயற்சி சென்றது.
கொங்கு பகுதிக்கு குறி
இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. அதிக தொகுதியை பாஜக கேட்டு வரும் நிலையில் தொகுதிகளை இறுதி செய்யும் நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை பாஜக அதிகம் குறிவைத்திருப்பதாக தெரிகிறது.
பிரதமர் மோடி
இதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25ம் தேதி கோவை வருகிறார். அப்போது அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள். எந்தெந்த தொகுதிகள் என்று பட்டியல் வெளியாகலாம் என்ற தகவலும் உலாவருகிறது. எனவே பாஜக எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறது என்பது பிரதமர் மோடி மீண்டும் வரும் போது தெரியவரலாம்
எங்கெல்லாம் வாயப்பு
30 தொகுதிகளுக்கு மேல் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை, திருப்பூரில் நிச்சயம் சில தொகுதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. சிவகங்கை, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகள் பாஜக போட்டியிடும தொகுதிகளாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிரடி திட்டம்
பிரதமர் மோடி 25ம் தேதி கோவை வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பிப்ரவரி 21ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வர உள்ளார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர உள்ளதாகவும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என்று சொல்லப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.