பாஜக வைத்து வரும் டிமாண்ட்.. குழப்பத்தில் அதிமுக.. தொடரும் இழுபறி.. அடுத்து என்னவாகும்!
சென்னை: இப்படி ஒரு தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உண்மையா என்பது தெரியவில்லை. அதிமுக பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்றே இறுதி செய்ய இயலவில்லை. இதற்கு காரணம் அதிமுகவிடம் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டிடிவி தினகரன் தரப்பை சேர்க்க வலியுறுத்துவதாகவும் தகவல்கள் உலா வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. இதனால் திமுக , அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக இறங்க உள்ளன.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி சாட்டை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கூட்டணி பேச்சுவார்த்தை
திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த, திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு ஒவ்வொரு நாளும் கட்சிகளை அழைத்து பேசி வருகிறது.
பாஜக மேலிட பொறுப்பாளர்கள்
இந்நிலையில் அதிமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. நேற்று உள்துறை இணையமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷாண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் விகே சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக அமைப்பு பொதுசசெயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருந்தனர்.
முதல்வர் மறுப்பு
பேச்சுவார்த்தையின் போது பாஜகவினர் 60 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொகுதி பட்டியலை அளித்ததாக கூறப்படுகிறது,. ஆனால் 21 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கறராக கூறிவிட்டாராம். இதனிடையே 21 தொகுதிகளை பெற பாஜக சம்மத்துவிட்டதா இல்லை என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. ஒருவேளை சம்மத்து இருந்தால் நேற்றே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கும்
20 தொகுதிகள்
இதனிடையே இன்னொரு தகவலும் உலா வருகிறது. சசிகலா, டிடிவி தினகரன் தரப்பை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரன் தரப்பில் 20 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கையை அதிமுக இதுவரை ஏற்கவில்லை. சசிகலா, டிடிவி தினகரன் தரப்பை சேர்ப்பது இல்லை என்று எடப்பாடி உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தேமுதிக உடன் பேச்சு
இதனிடையே பாமக உடன் வெற்றிகரமாக தொகுதி உடன்பாட்டை அதிமுக நேற்று நிறைவு செய்தது. 23 தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது பாமக தரப்பு. ஆனால் எந்ததெந்த தொகுதிகள் என்பது தெரியவில்லை. குறைவான தொகுதிகள் என்றாலும் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை மட்டும் பெற வேண்டும் என்று பாமக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. 10 தொகுதிகளை தர அதிமுக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.