மோத போகும் 2 "மாஜிக்கள்".. நெய்வேலியில் வீச போகும் புயல்.. பாமகவுக்கு சவால்.. சமாளிப்பாரா ராமதாஸ்
நெய்வேலியில் 2 முன்னாள்கள் தேர்தலை சந்திக்க போகிறார்களாம்
சென்னை: நெய்வேலி தொகுதியில் 2 "முன்னாள்"கள் நேரடியாக மோதி கொள்ளும் சூழல் உருவாக போகிறதாம்.. அதாவது டாக்டர் ராமதாசுக்கு புது தலைவலி ஏற்பட போகிறது!
கடலூர், குறிஞ்சிபாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் கடலூர் தொகுதி.
இங்கு முக்கிய வேட்பாளர்களாக பாமக சார்பில் எப்போதுமே டாக்டர் கோவிந்தசாமிதான் முன்னிறுத்தப்படுவார். இவர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்.. பாமகவின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர், கட்சியின் சீனியரும்கூட.. இந்த தொகுதி முழுக்க கோவிந்தசாமி நன்கு பரிச்சயம். அதனால் சமுதாய வாக்குகளை பலமாக நம்பிதான் பாமக எப்போதும் இங்கு களமிறங்கும்.
பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..!
நலத்திட்டம்
நெய்வேலியை பொறுத்தவரை ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்த தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் என்எல்சி நிர்வாகமே மேற்கொண்டு பராமரித்துவிடும்.. தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை, நெய்வேலி நகருக்கென ஒதுக்கவேண்டிய அவசியமே இருக்காது.
தொகுதி
இங்கு பெரும்பாலானவர்கள் என்எல்சி. ஊழியர்களாக இருப்பதால், எம்எல்ஏவை யாரும் அவ்வளவாக சந்திக்கவும் வரமாட்டார்கள். அதனால், இங்கு யார் எம்எல்ஏவாக இருந்தாலும் அது அவர்களுக்கு சுலபம்தான் என்பதால், இந்த தொகுதியை கைப்பற்றுவதில் பெரும்பாலான கட்சிகள் ஆர்வம் காட்டும். இப்போது விஷயம் என்னவென்றால், தேர்தல் களை ஆரம்பமாகிவிட்டது.
பாமக
இதற்கான பணிகளும் துவங்கிவிட்டன.. நெய்வேலி தொகுதியில், அதிமுக. கூட்டணியில் பாமக உள்ளது.. இந்த முறையும், கோவிந்தசாமியே பாமக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. அதேபோல், திமுக கூட்டணியில், இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.. எப்போது தேர்தல் வந்தாலும், வேல்முருகனின் தவாகவினர் பாமகவுக்கு எதிராகவே தீவிரமான பிரச்சாரத்தை கையில் எடுப்பார்கள்.
பட்டியலின வாக்குகள்
தவிர, பட்டியலின வாக்குகள் பாமகவுக்கு அதிகமாக விழாது.. திமுகவில் வேல்முருகன் இருப்பதால், வன்னியர் + பட்டிலியன வாக்குகளை லட்டுபோல அள்ளவும் வாய்ப்புள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, வேல்முருகனின் சொந்த ஊர் கடலூர் தொகுதிக்குள் வருவதால், பாமகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.
முன்னாள்கள்
இருவரும் இந்த தொகுதியில் பலம் வாய்ந்தவர்கள்.. 2 பேருமே செல்வாக்கானவர்கள்.. 2 பேருமே பாமகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் என்பது.. இந்த முறை இவர்கள் நேருக்கு நேராக மோதவிருப்பதால், பெரும் பரபரபப்பு கூடியுள்ளது. இது நிச்சயம் ராமதாசுக்கு தலைவலியைதான் உண்டு பண்ணும் என்கிறார்கள். ஆனாலும், வன்னியர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள்தான் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிப்பதாக உள்ளது!