தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின் - 7ஆம் தேதி பதவியேற்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமையன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின். 7ஆம் தேதி முதல்வராக ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்கப்போகிறார் மு.க ஸ்டாலின்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமையன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின். சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றியுள்ளது திமுக கூட்டணி. திமுக மட்டும் 125 இடங்களைப்பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதியானது.
இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டமன்றக்குழு தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
நாளை காலை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், பதவி ஏற்பு விழாவுக்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.