தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. ஓவைசி அதிரடி அறிவிப்பு.. நமட்டுச் சிரிப்புடன் இஸ்லாமியக் கட்சிகள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர், அசாதுதின் ஓவைசி இன்று அறிவித்துள்ளார்.
Recommended Video
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டுள்ளது அகில இந்திய மஜ்லிஸ் கட்சி. இருப்பினும், தெலுங்கானா, ஆந்திரா தவிர்த்து, பிற மாநிலங்களிலும் இந்த கட்சிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது.
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி.
உத்தரபிரதேச மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் இந்த கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 5 தொகுதிகளை இந்த கட்சி வென்றது.
பீகாரில் அசத்தல்
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை அடங்கிய மெகா கூட்டணியில் அசாதுதீன் ஓவைசி கட்சி சேரவில்லை. தனித்துப் போட்டியிட்டதால் சிறுபான்மையினர் சிதறியது. எனவே பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தமிழகத்தில் போட்டி
இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். இரு மாநிலங்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை மம்தா பானர்ஜி பெருமளவு நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அசாதுதீன் ஓவைசி கட்சி போட்டியிட்டால் சிறுபான்மையினர் ஓட்டுகள் இவர் பக்கம் திரும்பும் வாய்ப்பு ஏற்படும். அது பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவாக அமைந்துவிடும்.
திமுகவுக்கு பாதகமா?
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் அடங்கிய கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் உள்ளன. ஆனால் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, சிறுபான்மையின மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டால் அது திமுக கூட்டணிக்கு பாதகமாக மாறி விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஓவைசியால் வாக்குகள் சிதறாது
"ஏற்கனவே உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு, மொத்தமாக இஸ்லாமியர்கள் ஓட்டு போடுவது கிடையாது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என பல திராவிட கட்சிகளுக்கும் வாக்குகள் பிரிகின்றன. எனவே ஓவைசி கட்சி மொத்தமாக சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளி விடும் என்பது அபரிமிதமான கற்பனை அப்படி எதுவும் தமிழகத்தில் நடந்து விடாது.." என்று திமுக வட்டாரத்தில் உறுதியாகச் சொல்கிறார்கள்.