நாளை கூடுகிறது தமிழக சட்டமன்றம்... புயலை கிளப்ப திமுக திட்டம்
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை காலை தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை விவாதத்திற்கு கொண்டு வந்து பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது திமுக.
திமுகவை சமாளிக்கும் வகையிலும், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் விவாதத்திற்கு கொண்டு வருவார்கள் என்றும் ஆலோசித்து அதற்கு தகுந்த பதிலை கொடுக்க ஆயத்தமாகியுள்ளனர் மூத்த அமைச்சர்கள் சிலர்.
குறிப்பாக குடியுரிமைச் சட்டம் தொடர்பாக திமுக ஆவேசம் காட்டும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட முதல்வர், அதனை சமாளிப்பதற்கான விவரங்களை தயாராக வைத்திருக்கிறார்.
தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறாரா து. குப்புராமு? சென்னை கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு?
முதல் கூட்டம்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் சட்டமன்றத்தில் நாளை உரை நிகழ்த்தவுள்ளார். இதனால் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டது.
எத்தனை நாட்கள்
ஆளுநர் உரை நிகழ்த்திய பின்பு நாளை பிற்பகல் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவைக்கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பொங்கல் பண்டிகை விடுமுறை வேறு வருவதால் அதற்கு முன்பே கூட்டத்தை முடிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
புயலை கிளப்ப
தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஆவேசம் காட்ட முழுமூச்சில் தயாராக உள்ளது திமுக தரப்பு. கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பாதிப்பு பற்றிய புள்ளி விவரங்களை தயாராக வைத்திருக்கிறது திமுக. மேலும், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தனி நபர் தீர்மான நிறைவேற்ற ஸ்டாலின் முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது/
பதிலடி
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்க ஆளுந்தரப்பும் தயாராகவே இருக்கிறது. திமுகவுக்கு பதிலளிக்க தேவையான புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார் முதல்வர்.