பரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..!
சென்னை: தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பிப்ரவரி 2-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
Recommended Video
இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்றதை போல் கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2-ம் தேதி
2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வழக்கமாக ஜனவரி 2-ம் வாரத்தில் நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு பிப்ரவரி வரை தள்ளிச்சென்றிருக்கிறது.
முக்கிய அறிவிப்புகள்
வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வரவுள்ளதால் ஆளுநர் உரை மற்றும் அதற்கு பிறகு நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏராளமான சலுகைகளும், அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு கூட்டத்தொடர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியதாக இருக்கிறது.
ஆளுநர் உரை
ஆளுநர் உரை மற்றும் அறிவிப்புகள் பற்றி விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எங்கே கூட்டம்?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த முறை நடைபெற்றதை போல் இந்த முறையும் கலைவாணர் அரங்கத்திலேயே கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலகம் தொடங்கியுள்ளது. இதற்கான மேசை மற்றும் நாற்காலிகள் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.