பரபரப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை...மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல்..திங்கள் வரை ஒத்திவைப்பு
Recommended Video
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது, இன்று மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது
மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்காக காலை10 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அப்போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ்(அதிமுக), விக்கிரவாண்டி ராதாமணி(திமுக) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் ஜுலை 1ம் தேதி (திங்கள்) தொடங்கி ஜுலை 30ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரிரல் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை முக்கிய பிரச்சனையாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதேபோல் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காதது, 8வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு பிரச்னை, சட்டம் ஒழுங்கு, 7 தமிழர் விடுதலை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர். அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.