தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:
சட்டசபை மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, வசதியாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 28ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 29ம் தேதி, 30ம் தேதி அரசு விடுமுறையாகும்.
தமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்
ஜூலை 1ம் தேதி வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை, 2ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வி, இளைஞர் நலம் போன்ற மானிய கோரிக்கைகள் வரும். இவ்வாறு தினமும் ஒரு துறைவீதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
ஜூலை 30ம் தேதி காலை, பதிலுரை அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். ஆகமொத்தம், விடுமுறை தினங்களை தவிர்த்துவிட்டு, 23 நாட்கள் பேரவை நடைபெறும். எல்லா நாட்களும் கேள்வி நேரமும் இருக்கும்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜூலை 1ம் தேதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான நிகழ்ச்சி நிரல் 28ம் தேதியே வெளியிடப்படும். அதில் இருக்கும். நீங்களே பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதியே எடுக்கப்படுமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, அஜென்ட்டா முன்கூட்டியே கொடுத்துவிடுவோம். வெளியிடப்பட்டு ஜூலை 1ம் தேதி 'நிகழ்ச்சி' என்று இருக்கும். அது என்ன என்பது அன்றுதான் தெரியும். இவ்வாறு தனபால் தெரிவித்தார். சபாநாயகர் பேட்டியை வைத்து பார்த்தால், ஜூலை 1ம் தேதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.