தமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு
சென்னை: கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றம் வரும் மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடும் என பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழக நிதி நிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து 4 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான பொதுவிவாதம் மட்டுமே நடைபெற்றது. துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. எப்போதும் பட்ஜெட் தக்கல் செய்யப்பட்டவுடன் அந்த கூட்டத்தொடரிலேயே மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடப்பது தான் வழக்கம்.
ஆனால் இந்த முறை வழக்கமான நடைமுறை பின்பற்றப்படவில்லை. காரணம், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் சி ஏ ஏ-வை எதிர்த்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவலர்கள் நடத்திய தடியடி பூதாகரமாகியது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி அந்த விவகாரத்தை மையமாக வைத்து சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பியது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்கள் மட்டும் நடத்திவிட்டு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு வரும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். மார்ச் 9-ம் தேதி தொடங்கும் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என தெரியவில்லை. அன்றைய தினம் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை தீர்மானிக்கும். இந்த கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
டெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி
இதனால் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேச வேண்டிய குறிப்புகளை துறை சார்ந்த அதிகாரிகள் குழு தயாரித்து வருகின்றனர். குறைந்தது 20 நாட்களுக்காவது இந்த கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது.