ஜனவரி 8-ஆம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்... சபாநாயகர் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினர். இதில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழக அரசு தந்துள்ள அறிக்கையை ஆளுநர் வசிப்பதாக கூறியும், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மறுப்பதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவலர் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர், இதுகுறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். மேலும், நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானத்துடன் அவை ஒத்திவைக்கப்படும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டசபை கூட்டத் தொடரில் விவாதிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.