சென்னை.. குப்பையை அகற்றி, போட்டோ எடுத்ததும், அங்கேயே மூட்டையை விட்டு சென்றதாக சர்ச்சை: பாஜக விளக்கம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூய்மை பாரதம் திட்டத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் தருபவர் நரேந்திர மோடி. எனவே, அவரது பிறந்தநாள் தினத்தன்று, கடற்கரையை தூய்மைப்படுத்துவதன் மூலமாக மக்களுக்கு மெசேஜ் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது.
என்னாச்சி.. அதிருப்தியில் குஷ்பு? மோடி பிறந்த நாள் நிகழ்ச்சியில் மிஸ்சிங்.. ஒதுங்குவது ஏன்?
போஸ் கொடுத்து போனதாக குற்றச்சாட்டு
ஆனால், இந்த நிகழ்ச்சியின்போது கடற்கரையில் இருந்த குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அள்ளிவிட்டு அங்கேயே விட்டுச் செல்லப்பட்டு விட்டதாக சில படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு கழிவுகளை அகற்றாமல் அங்கேயே வைத்து விட்டார்கள் என்று அந்த புகைப்படங்களை வெளியிட்டவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
விமர்சனங்கள்
தூய்மை பாரதம் என்ற திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளின்போது இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களில் இது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல இங்கும் குப்பைகளை அப்படியே விட்டு விட்டதாக சிலர் விமர்சனம் செய்தனர்.
பாஜக மறுப்பு
ஆனால், இதை தமிழ்நாடு பாஜக இளைஞர் பிரிவு தலைவர் வினோஜ் செல்வம் மறுத்துள்ளார். குப்பை சேகரிக்கப்பட்ட அனைத்து பேக்களும் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார் வினோஜ் செல்வம்.
வினோஜ் செல்வம் ட்வீட்
கடற்கரையோரத்தில் உள்ள குப்பை சேகரித்த பிறகு அங்கிருந்த மீனவர்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடும் சமயத்தில் எப்போதும் பாஜகவை குறை சொல்லும் நோக்கோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பதிவு இது!அனைத்து பைகளும் எங்கள் நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
என்ன விஷயம்
குப்பை மூட்டையாக கட்டப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலகட்டம் வரை அங்கேயே இருந்ததால், அந்த புகைப்படம் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து குப்பை அங்கேயே இருக்கவில்லை. அதை நாங்கள் அகற்றி விட்டோம் என்பது பாஜக தரப்பு வாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.