சசிகலா புஷ்பா வருகையும்... தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தியும்
சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்த விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு எந்த உடன்பாடும் கிடையாதாம்.
சசிகலா புஷ்பாவை கட்சியில் இணைப்பதற்கு முன் தலைமை ஒரு முறை எங்களை அழைத்து கருத்துக்கேட்டிருக்கலாம் அல்லது அவரது புரோஃபைல் தொடர்பாக விசாரித்து முடிவெடுத்திருக்கலாம் என்பது அவர்களின் மனக்குமுறலாக உள்ளது.காரணம் கன்னத்தில் அறைந்தார் என ஜெயலலிதா மீதே புகார் கூறியதுடன் அது பற்றி நாடாளுமன்றத்திலும் பேசி கிடுகிடுக்க வைத்தவர், நாளை இங்கும் என்னவேண்டுமானாலும் செய்வார் என்ற அச்சம் உள்ளது. இதனால் தான் சசிகலா புஷ்பா வருகையை தமிழக பாஜகவினர் சற்று வேண்டா வெறுப்போடு பார்க்கின்றனர்.
மேலும், சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறாரா, இதுவரை இருந்திருக்கிறாரா என்றால் அது கேள்விக்குறி தான். ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் புகார் கூறியதால் தமிழகம் வரவே சில மாதங்கள் அச்சப்பட்டு டெல்லியில் முடங்கிக் கிடந்தார் இவர். இதன் பின்னர் நாடார் சமுதாய பிரமுகர்களின் துணையோடு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு வருகை தந்தார். அவரது செயல்பாட்டை வைத்து அப்போது பார்க்கும் போது, தனி அமைப்பு தொடங்குவது போல் இருந்தது. ஆனால் அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் டெல்லியிலேயே இருந்து வந்தார்.
பின்னர் திடீரென ஒரு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து அந்தக் கட்சியில் இணைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். மேலும், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றிபெற்ற போது அவரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, தினகரனுக்கு தான் மக்கள் ஆதரவு உள்ளதென்றும் அவர் தான் வீரர் என்றெல்லாம் புகழாரம் சூடினார். அதன்பின்னர் அந்தக் கட்சியிலும் இணையவில்லை. அவரை கட்சியில் இணைக்க தினகரனும் ஆர்வம் காட்டவில்லை.
ரஜினி கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டாம்.. பாஜகவில் சேர்ந்துடலாம்.. கார்த்தி சிதம்பரம் அதிரடி அட்டாக்!
இந்நிலையில் பாஜக தேசிய நிர்வாகிகள் மூலம் இப்போது அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். அதுவும் தமிழகத்தில் அந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்தாமல் முரளிதரராவ் முன்னிலையில் டெல்லியிலேயே இணைந்துகொண்டார். இது தான் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது.